வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தவர் பூபேஷ் குமார். குற்றசெயல்கள் அதிகம் நடைபெறுவதாக அறியப்படும் அந்தப் பகுதியில் உள்ள சலூன் ஒன்றுக்கு முடி வெட்டுவதற்காக பூபேஷ், தனது 13 வயது மகனுடன் கடந்த வியாழக்கிழமை சென்றிருக்கிறார். முடிவெட்டிய பிறகு சலூன்கடையில் பூபேஷுடம் 50 ரூபாய் கேட்டிருக்கிறார்.
அதற்கு, தன்னிடம் 30 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறியிருக்கிறார் பூபேஷ். மீதமுள்ள 20 ரூபாயை பின்னர் தருவதாக சலூன்கடை நடத்திவரும் சந்தோஷிடம் கூறி 30 ரூபாயையும் கொடுத்திருக்கிறார். ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த சந்தோஷ், 20 ரூபாயை உடனே தரும்படி கேட்டதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது முற்றியிருக்கிறது.
Also Read: நெல்லை: வெடிகுண்டு வீசி, கழுத்தை அறுத்து இரு பெண்கள் கொடூரக் கொலை! – உறையவைத்த பழிக்குப் பழி சம்பவம்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தோஷ் மற்றும் அவரது சகோதரர் சரோஜ் ஆகிய இருவரும் சேர்ந்து பிளாஸ்டிக் பைப்பால் பூபேஷைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இந்த சம்பவம் பூபேஷின் 13 வயது மகனின் கண்முன்னே அரங்கேறியிருக்கிறது. தனது தந்தையை விட்டுவிடும்படி பூபேஷின் மகன் கெஞ்சியும் சலூன்கடை நடத்திவந்த சகோதரர்கள் விடவில்லை. அவர்கள் தாக்கியதில், படுகாயமடைந்த பூபேஷ், அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு பூபேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ் மற்றும் சரோஜ் ஆகியோரைக் கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
பூபேஷ் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. அதில், பூபேஷ் தாக்கப்படுவதைத் தடுக்க அவரது மகன் முயற்சி செய்வதும், ஆனால், அவரைத் தள்ளிவிட்ட பின்னர் தொடர்ந்து தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த சமயத்தில் சலூன் கடையில் இருந்த வேறு ஒருவர், தனது மொபைலில் அந்த வீடியோவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அங்கு மேலும் சிலர் இருந்தநிலையில், பூபேஷுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.