மறைந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியுள்ளார் இசைஞானி இளையராஜா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரைத்துறையினர் பிரார்த்தனை செய்தார்கள்.
ஆனால், நேற்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் எஸ்.பி.பி. இன்று பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மற்ற இசையமைப்பாளர்களைவிட இசைஞானி இளையராஜாவுடன்தான் எஸ்.பி.பி அதிகப் பாடல்களை பாடியிருக்கிறார். இளையராஜா திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே அவருடைய ’பாலவர் சகோதரர்கள்’ குழுவில் எஸ்.பி.பி மேடைக்கச்சேரிகளில் இணைந்து பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா இசையில் 3500 க்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். தமிழ் இசைத்துறையில் இக்கூட்டணி பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய, தற்போது திருவண்ணாமலைக் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார் இளையராஜா.