புதுக்கோட்டை அருகே மரக்கடை வீதியில் இருந்தது புவனேஸ்வரியின் குடிசை வீடு. மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகனுடன் மெழுகுவத்தி வெளிச்சத்தில் குடும்பத்தை ஒட்டி வந்த புவனேஸ்வரிக்கு, தற்போது அந்த குடிசை வீடும் இல்லை. வெளிச்சத்திற்காக வீட்டிற்குள் மெழுகுவத்தி ஏற்றிவைக்க, எதிர்பாராதவிதமாக அந்த மெழுகுவத்தி பற்றி எரிந்து வீடே தீக்கிரையாகிவிட்டது. அந்த நேரத்தில் தாயும், மகனும் வீட்டிற்கு வெளியே இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துவிட்டனர்.

புவனேஸ்வரி, முரளி

பக்கத்து வீடுகளில் உள்ள வீட்டு வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்த புவனேஸ்வரிக்கு கொரோனா ஊரடங்கு நாள்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிட்டது. அதோடு, வீடும் தீக்கிரையான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் புவனேஸ்வரி அல்லாடிக்கொண்டிருக்கிறார்.

புவனேஸ்வரியிடம் பேசினோம். “பொறந்து வளர்ந்தது எல்லாம், மரக்கடை வீதியிலதான். கல்யாணத்துக்குப் பிறகு திருக்கோகர்ணத்தில் வாடகை வீட்டில்தான் இருந்தோம். 20 வருஷத்துக்கும் மேலாக நல்லா பார்த்திக்கிட்ட என் கணவரு, இப்ப ஒரு வருஷமா என்னைக் கைவிட்டுட்டாரு.

குடியிருந்த வீட்டுக்கு வாடகைகூட கட்ட முடியலை. என்ன செய்யுறதுன்னு தெரியலை. ஒரு கட்டத்துல வேற வழியில்லாம வாடகை வீட்டைக் காலிபண்ணிக்கிட்டு பொறந்த வீட்டுக்கு வந்துட்டேன். அப்பா, அம்மா இப்போ இல்லை. கூடப்பொறந்தவங்க ஒரு அக்கா, ரெண்டு அண்ணனுங்க. முரளி எனக்கு ஒரே பையன். முரளிக்கு முன்னாடி ரெண்டு, மூணு பிள்ளைங்க பொறந்து இறந்துபோச்சு. முரளிக்கு இப்போ 25 வயது ஆகுது. ஆனா, சின்னப்பையனாட்டம் இருப்பான். புகுந்த வீட்டை விட்டுட்டு இத்தனை வருஷம் கழிச்சு ஒன்னுமே இல்லாம வந்து நிற்கிறேங்கிற கவலை இருந்துச்சு.

முரளி

எத்தனை கவலைகள் வந்தாலும், முரளியோட முகத்துல இருந்து வர்ற சிரிப்பைப் பார்த்தாலே அத்தனை கவலையும் மறந்து போயிடும். அவனுக்காகத் தான் என் உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். பெரிசா அண்ணனுங்க உதவலாட்டியும், இப்போதைக்குக் குடியிருக்கிறதுக்கு இடத்தைக் கொடுத்தாங்க. குடிசை வீடு வைக்கிறதுக்குக் கொஞ்சம் உதவியும் செஞ்சாங்க. நானும் வீட்டு வேலை செஞ்சு, அதில் கிடைச்ச வருமானத்தை வச்சு, குடிசையைக் கட்டிக்கிட்டு குடியிருந்துக்கிட்டு இருந்தேன்.

Also Read: நெருப்புக்கு இரையாகிய குடிசை.. தவித்த குடும்பம்.. ஊரடங்கு நேரத்திலும் சொன்னதை செய்த டாக்டர்!

ஆனா, யாருக்கு பாவம் செஞ்சனோ தெரியல, எங்களோட குடிசை எரிஞ்சு சாம்பாலா போச்சு. வெளிச்சம் இல்லையேன்னு மெழுகுவத்தியை ஏத்தி வச்சிட்டு வேலைக்குப் போயிட்டேன். என்ன ஆச்சுன்னே தெரியலை, வந்து பார்க்கும் போது, வீடே எரிஞ்சுபோய் கிடந்துச்சு.பிளாஸ்டிக் கவர் உருகி தீப்பத்திருச்சு. கெட்டதுலயும், ஒரு நல்லதா முரளி வீட்டுக்குள்ள இல்லாம வெளிய வந்துட்டான். வீடு எரிஞ்சு போச்சேங்கிற கவலை ஒருபக்கம் இருந்தாலும், பிள்ளைக்கு ஒண்ணும் ஆகலையேன்னு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அண்ணன் வீட்டுலயும் கொஞ்சம் உதவி பண்றாங்க.

புவனேஸ்வரி, முரளி

இருந்த எல்லா பொருளும் தீப்பத்தி எரிஞ்சுபோச்சு. சாப்பாடு சமைச்சு சாப்பிடக்கூட எந்தப் பொருளும் இல்லை.வீட்டு வேலை பார்க்கிறவங்க வீட்டுல இப்போதைக்கு ரெண்டு பேரும் தங்கிக்கிறோம். ஊரடங்கால், தொடர்ச்சியா வீட்டுவேலையும் இல்லை. என்ன செய்யிறதுன்னே தெரியலை. என்னோட நிலைமையை தெரிஞ்ச சிலர் வந்து வீடு கட்டித் தர்றாக சொல்லிருக்காங்க. எனக்கு அப்புறம் முரளியை சொந்தக்காரங்க நல்லா பார்த்துங்கவாங்களான்னு தெரியலை. ஆனா, என் உசுரு இருக்க வரைக்கும் முரளியை நல்லா பார்த்துக்கணும் அதுதான் என்னோட ஆசை” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.