பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய சவால் ’எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது, எங்கு படிப்பது?’ என்பதே. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஆனந்த விகடன் ஒரு ஸ்மார்ட் வழிகாட்டல் நிகழ்ச்சியை செப்டம்பர் 20 அன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சி ஜூம் செயலி மூலம் நடைபெற்றது.
மாணவர்கள், பெற்றோர்கள் என 150-க்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் பேசிய Dr.MGR educational and research institute University-யின் இணை பதிவாளர் டாக்டர் வி.சிரில் ராஜ், “வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் பல்வேறு துறைகள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் பிரிவுகளில் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் அதை எங்கு படிப்பது என்பது மிகவும் அவசியம். ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது அங்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார் செய்வது எப்படி?” என்பதை விளக்கிப் பேசினார்.
Also Read: வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிப்புகள் – ஆனந்த விகடனின் ஒரு ஸ்மார்ட் வழிகாட்டல்!
தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் ஆலோசனை வழங்கி வரும் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசும் போது, “நம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிறைய படிப்புகள் தெரிவதில்லை. மேலும், மாணவர்கள் ஒரு படிப்பை படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்று சொல்லக் கூடாது. படிக்கும் போது அது சார்ந்த துணை படிப்புகளையும் படிக்க வேண்டும். ஆன்லைனில் இருக்கும் சில இலவச படிப்புகளை கற்றுக் கொள்வதன் மூலம் படிக்கும் போதே சம்பாதிக்க முடியும். வேலையில்லா திண்டாட்டம் என்பது இப்போது இல்லை, திறமையில்லா திண்டாட்டம்தான்” என்றவர் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைகள் குறித்து விரிவாக பேசினார்.
இந்நிகழ்ச்சி குறித்து நம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட Dr.MGR educational and research institute University -யின் இணை பதிவாளர் டாக்டர் வி.சிரில் ராஜ், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் நண்பர்கள் படிக்கும் கல்லூரி, பெற்றோர் சொல்லும் துறை என்று தேர்ந்தெடுக்காமல் எந்தக் கல்லூரி, துறையில் வாய்ப்புகள் அதிகம் என்பதை சிந்தித்து தேர்ந்தெடுக்க இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியாக இருந்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக, ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.
கற்றல் என்பதை விட ‘எதை கற்பது’ என்பது மிகவும் அவசியம். அதற்கு மாணவர்களின் தேடல் மிகவும் அவசியம்.