கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கால் பகுதியில் காயத்துடன் வலம் வந்து கொண்டிருந்தது தெரியவந்தது. காயம் காரணமாக, அந்த யானை மிகவும் சிரமப்பட்டது. இதனால், அந்த யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, வனத்துறை தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவுப்படி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
Also Read: அவுட்டுக்காய் ஏற்படுத்திய காயம்! – தமிழக, கேரள எல்லையில் சுற்றிவந்த மக்னா யானை உயிரிழந்தது
இதற்காக, சாடிவயல் முகாமில் இருந்து சுயம்பு மற்றும் வெங்கடேஷ் என்ற இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் அழைத்து செல்லப்பட்டன. ஆனால், காயமடைந்த நெல்லித்துறை அடர்வனப்பகுதிக்கு சென்றுவிட்டது.
சாதகமற்ற நிலப்பரப்பு காரணமாக, யானை சமதள பரப்புக்கு வந்தப் பிறகு மயக்க ஊசி செலுத்த வனத்துறை முடிவெடுத்தது. இதற்காக, 2 கும்கி யானைகள், 5 மருத்துவக்குழுக்கள் தயார்நிலையில் இருந்தனர். ஆனால், நேற்று மாலை அந்த ஆண் யானை உயிரிழந்துவிட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், `நெல்லித்துறை காப்பு காட்டில் இரண்டு நாள்களாக லேசாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
யானை சேற்று பகுதியில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த யானைக்கு காயம் இருந்ததால், அதனால் எழுந்திருக்க முடியவில்லை என்று யூகிக்கிறோம். தொடர்ந்து, முயற்சித்தும் யானையால் எழ முடியவில்லை.
விழுந்த இடத்தில் இருந்து, 15 அடி தூரம் நழுவி சென்று யானை இறந்துள்ளது. காலில் உள்ள காயம் தவிர, வேறு ஓர் யானையுடன் ஏற்பட்ட மோதலில் அந்த யானைக்கு தோள்பட்டையில் தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. உயிரிழந்த யானைக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
இதன் மூலம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மட்டுமே மே மாதத்தில் இருந்து இப்போதுவரை, 3 யானைகள் உயிரிழந்துள்ளன. கோவை மாவட்டத்தில், நடப்பாண்டில் பலியான யானைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.