மதுரையில் தாய்மாமனை மருமகன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். அவரை தடுக்க சென்ற மனைவி மற்றும் மகன் சிறு காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (67). இவர் அதே பகுதியில் சிமெண்ட் கடைவைத்து நடத்திவருகிறார். இவரது மனைவி சரோஜா (வயது 60) மற்றும் மகன் சிவகுமார் (வயது 31) ஆகியோர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்கு வந்த சிவலிங்கத்தின் தங்கை மகன் விஜி, சிவலிங்கத்தை சரமாரியாக கத்தியால் குத்தியதியுள்ளார். இதில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். .தடுக்க சென்ற மனைவி மற்றும் மகனுக்கும் கத்திக்குத்து விழுந்ததில் சிறுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விஜியின் தங்கைக்கும் செல்வகுமார் என்பவருக்கும் திருமணமாகி, பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாருக்கு சிவலிங்கம் இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து தன் தங்கையுடன் விவாகரத்தான முன்னாள் கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில், சிவலிங்கத்தை அவரது தங்கை மகன் விஜி கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே சிவலிங்கம் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுஜித்குமார் டி.எஸ்.பி. வினோதினி ஆகியோர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர்.