புதுக்கோட்டை, விபத்தில் சிக்கியவரை மீட்க 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே உள்ளது ரெங்கம்மாள் சத்திரம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் நரிக்குறவ இனமக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும் போது அந்த வழியாக சென்ற மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் வண்டியை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் இந்த விபத்தில் பால்ராஜ் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிவித்து ஒருமணி நேரத்திற்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலைகளில் மரங்களை போட்டு புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்த பால்ராஜை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து மினி சரக்கு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.