நீலகிரி அ.தி.மு.க-வின் புதிய மாவட்டச் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டவர் வினோத். வெளிப்படையான ஓ.பி.எஸ் ஆதரவாளரான வினோத், தான் பதிவியேற்றதுமே சென்னைக்குச் சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று அந்தப் புகைப்படங்களை வெளியிட்டார்.
கடந்த மாதம் நீலகிரியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் ஊரே வெள்ளத்தில் மிதக்க, வினோத், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்ததைக் கொண்டாட, சமூக இடைவெளியை மறந்து பெருமழைப் பேரிடரில் ஒரு விழாவையே நடத்தி, சர்ச்சைக்குள்ளானார்.
Also Read: `மய்யத்தில் மனக்கசப்பு; அ.தி.மு.க-வில் அரவணைப்பு!’ – வேலூர் பிரமுகர் உற்சாகம்
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க-வில் மாவட்ட, ஒன்றிய அளவிலான பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்பட்டது. மேலும் எட்டு ஒன்றியங்கள் பதினைந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதிலும் டி.டி.வி குரூப் என்று சொல்லப்படும் அ.ம.மு.க விலிருந்து திரும்பியவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி மூத்த நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்ட கோத்தகிரி எம்.ஜி.ஆர் சிலை முன்பு போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த மேல்குந்தா பகுதியைச் சேர்ந்த திப்ப வாத்தியார் என்பவருக்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
அ.தி.மு.க மூத்த நிர்வாகியும், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவருமான மாயன் பேசுகையில், “போன சட்டமன்றத் தேர்தல்ல நம்ம கட்சிக்கு எதிரா வேலை செஞ்சாங்க அப்படின்னு, அம்மாவால கட்சியவிட்டு தூக்கினவங்களுக்கு இப்போ போஸ்ட்டிங் போட்டிருக்காங்க. டி.டி.வி அணியிலருந்து திரும்பிய எல்லாருக்குமே பதவி குடுத்திருக்காங்க. உண்மையா, கட்சியில மக்களுக்கு உழைச்சவங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இதைக் கண்டிச்சுத்தான் போராட்டமும் நடத்தினோம். அவங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு பதவி வழங்குறோம்னு, ஏகப்பட்ட குளறுபடி நடந்திருக்கு” என்றார்.
இது குறித்து நீலகிரி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் வினோத்திடம் பேசினோம். “நீலகிரி அ.தி.மு.க-விலுள்ள 17 சார்பு அணிகளில் 300 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அ.ம.மு.க-விலிருந்து ஆயிரக்கணக்கானோர் நம்மிடம் திரும்பி வருகின்றனர். கட்சி வளர்ச்சிக்குத் தீவிரமாக செயலாற்றிவரும் நிர்வாகிகளுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய அணி மாவட்டத் தலைவர் பதவியிலிருந்த திப்ப வாத்தியார் மறைந்த விவரத்தை இதற்கு முன்னாலிருந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு தெரியப்படுத்தவில்லை. அதனாலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தற்போது நான் விளக்கம் அளித்திருக்கிறேன்’’ என்றார்.