நாகப்பட்டினம் அருகே இயற்கை பேரிடர்களிலிருந்து காக்கும் வகையில் ஒரு லட்சம் பனை விதைகளை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள திட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி, கடலோரக் கிராமங்களில் ஒன்றானதாகும். சுனாமி, கஜாபுயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதியாகும். இந்நிலையில் அதைத் தடுக்கும் பொருட்டு நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடவு செய்யலாம் என ஊராட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் பனை விதைகள் என மொத்தமாக உள்ளாட்சிக் காலம் 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு மொத்தமாக ஐந்து லட்சம் பனை விதைகளை விதைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இயற்கைப் பேரிடர் காலப் பாதுகாப்பு நடவடிக்கையான தமிழக அரசின் பனை விதைகள் நடவு திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களைக் கொண்டு இதுவரை மொத்தமாக 20,000 பனை விதைகள் சேகரிக்கப் பட்டுள்ளன.
மேலும் முதல் கட்டமாக 2,000 பனை விதைகளை செருதூரில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலை இருபுறங்களிலும் 300 – க்கும் மேற்பட்ட மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் மூலம் பனை விதைகளை நடவு செய்தனர். முன்னதாக உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விதைப்பு பணிகளைத் தொடங்கி வைத்தனர்.