நாகை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமப் பெண்கள் திரண்டு போராட்டம் நடத்திய அதே நேரத்தில், `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது’ என மதுப் பிரியர்களும் போராட்டத்துக்குத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பட்டிரோடு பேருந்து நிலையத்தின் அருகில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. மக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால், மதுபோதையில் இருப்பவர்களின் தொந்தரவு காரணமாக அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துவருகின்றனர். இதனால், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் செவி சாய்க்காத காரணத்தால் இன்று `டாஸ்மாக் கடையை மூட வேண்டும்’ என அப்பகுதி கிராமப் பெண்கள் முடிவெடுத்ததாகத் தகவல் வெளியானது.
Also Read: டாஸ்மாக்: `படிப்படியாக மூடுவோம்னு சொன்னாங்க!’ – புதிய கடைகளால் மக்கள் அதிர்ச்சி
இதனால், அப்பகுதியில் இன்று காலையிலிருந்து போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்தப் பகுதிப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதோடு, அங்கிருக்கும் டாஸ்மாக் கடையை விரைந்து மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருந்தபோதிலும் நாகை டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
முன்னதாக, டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்றும், அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மது பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்னர் குவிந்து எதிர்ப் போராட்டம் நடத்த முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.