வேளச்சேரியில் உள்ள நிலத்தை விற்பதற்காக ரூ. 3.75 கோடி மோசடி செய்ததாகச் சென்னை அட்வென்ட் சர்ச் பிஷபை, திருச்சி போலீஸார் நிலமோசடி வழக்கில் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அட்வென்ட் சர்ச் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்புக்குச் சொந்தமாக ஏராளமான பள்ளிகள் மற்றும் சர்ச்கள் உள்ளன. சென்னை மாவட்ட பிஷப் ஆக இருப்பவர் டேவிட். அவருடைய கட்டுப்பாட்டில் 107 சர்ச்கள், 50 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதைத்தவிர திருப்போரூர் பகுதியில் இயங்கி வரும் அட்வென்ட் பள்ளிகளுக்குத் தாளாளராகவும் இருந்து வருகிறார் டேவிட்.
அட்வென்ட் சர்ச்-க்கு சொந்தமான இடம் ஒன்று வேளச்சேரியில் உள்ளது. இதன் மதிப்பு 50 கோடி ரூபாய். இந்த நிலத்தைத் திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்வதாக கூறி ரூ 3.75 கோடியை முன்பணம் வாங்கியுள்ளார் டேவிட். அந்தப் பணத்தை சர்ச் வங்கி கணக்கில் போடாமல், இன்னொருவருடைய கணக்கைப் போலியாகத் தொடங்கி பிஷப் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் நிலத்தையும் அவர் விற்பனை செய்யவில்லை. மேலும் பிஷப் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது.
தற்போது அவர் பணி நீட்டிப்பில் இருந்து வருகிறார். அவரின் பணி நீட்டிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து, திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் சம்மந்தப்பட்ட நபர் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரை தொடர்ந்து திருச்சி போலீஸார் பிஷப் டேவிட்-ஐ சென்னையில் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கில் அட்வென்ச்சர் பொருளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் ஸ்டீபன், ப்ரோக்கர் நெல்லை சாமுவேல் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸார் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.