திமுக பொருளாளர் பொறுப்புக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதனைத்தொடர்ந்து பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இரு பதவிகளும் காலியானதால் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் எனவும் வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் எனவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குக்குச் சென்றிருந்த டி.ஆர்.பாலு நேற்று அவசர அவசரமாக தமிழகம் திரும்பினார். அவர் இன்று திமுக பொருளாளர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அளித்தார். பொருளாளர் பதவிக்கான பெரும்பான்மையான வாய்ப்பு இவருக்கே உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.