டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!
ஆன்லைன் கல்வி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசு, “டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளது. “அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்லதாகவும் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு எந்தவொரு சுமையும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தி திணிப்பு இல்லை…!
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்லியில், பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க வில் இணைந்தார். இன்று, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது” என்றார். மேலும், `வரும் தேர்தலில் தமிழக இளைஞர்கள் அதிகமாக பா.ஜ.கவவுக்கு வாக்களிப்பார்கள்” என்றார். தொடர்ந்து பேசியவர், புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை என்றும் தமிழர்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது என்றும் தெரிவித்தார்.
இ-பாஸ் குறித்து முதல்வர்!
“நீட் தேர்வு விவகாரத்தில், கொரோனா தாக்கம் குறைந்த பின் தேர்வுகளை நடத்துமாறு நான் பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து இ-பாஸ் குறித்து பேசிவர், `இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும்’ என்றார்.
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60,472 -ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,23,772-ஆகவும் உயர்ந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை – துணை முதல்வர் ஆய்வு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு இட மாற்றம் செய்யப்பட்டது. புதிய சந்தையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வந்தது. இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையை திறப்பது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பின்னர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
41 -வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடக்கிறது. மாநில நிதியமைச்சர்களுடன் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜிஎஸ்டி நடைமுறைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெறும்.