தெற்கு நியூசிலாந்தின் டுனெடினைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சமீர் அன்வர். 2018ஆம் ஆண்டு சமீர் தனது விளையாட்டுப் பொருளான லெகோ துண்டு ஒன்றை தனது மூக்கில் சொருகிவிட்டதாக தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறான். இதனால் பதற்றமடைந்த சமீரின் தந்தை முடசிர் மற்றும் அவரது மனைவி இருவரும் தேடியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே சமீரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அந்த துண்டை கண்டுபிடிக்கவோ அகற்றவோ முடியவில்லை. அதனால் உள்ளே சென்றிருந்தாலும் செரிமான பாதை வழியாக வெளியே வந்துவிடும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். விளையாட்டுத் தனமும், குறும்புத் தனமும் மிகுந்த சமீருக்கும் வலியோ, மற்ற எந்த பிரச்னைகளோ இல்லாத காரணத்தால் சோதனை செய்யாமல் விட்டுவிட்டனர்.
நேற்று இரவு ஒரு தட்டில் இளஞ்சிவப்பு நிறத்தில் கப் கேக்குகளை செய்து வைத்திருக்கின்றனர். அதை ஆழ்ந்து முகர்ந்து வாசனை பிடித்துக் கொண்டிருந்த சமீருக்கு திடீரென மூக்கில் வலி ஏற்பட்டுள்ளது. கேக் துண்டுகள்தான் மூக்கினுள் சென்றுவிட்டதாக நினைத்த சமீரின் தாய் மூக்கை ஊதிவிட்டிருக்கிறார்.
ஆனால், கேக் துண்டுகளுக்கு பதிலாக பூஞ்சை பிடித்த கருப்பு நிற லெகோ துண்டு ஒன்று வெளியே வந்துள்ளது. இதை ஒருபோதும் எதிர்பார்க்காத சமீரின் பெற்றோர், லெகோ துண்டு சற்று பெரியதாக இருந்தாலும், இதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
கலர்கலரான பிளாஸ்டிக் செங்கற்களின் ரசிகராக இருக்கும் சமீர், இந்த துண்டு காணாமல் போய்விட்டது எனக் கூறினீர்கள், இப்போது இங்கே இருக்கிறது என கூறியிருக்கிறான். சமீர் இதுபோல் மூக்கில் எதையாவது போடுவது இது முதன்முறை அல்ல. மூன்று வயதாக இருக்கும்போது சிறிய முத்து ஒன்றை மூக்கில் போட்டுவிட்டதாகவும், அதை அவரது தந்தையே எடுத்துவிட்டதாகவும் அம்மா கூறியுள்ளார்.