மேட்டூர் சரபங்கா திட்டம் எவ்விதத்திலும் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் பதில்மனு. மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்மனு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இருள்நீக்கி கிராமத்தை சேர்ந்த பிஆர் பாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை கொண்டு பாசன வசதி பெறுகின்றன. காவிரி நதி நீரை பெறுவது தொடர்பாக மாநிலங்களுடன் பிரச்சினை எழுந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

image

இதில் காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் அதில் மாற்றம் கொண்டு வந்து 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில், வழங்கப்பட்ட நீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவது என்றால் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்திடம் உரிய அனுமதியை பெற வேண்டும்.

ஆனால் இதுபோன்ற அனுமதி எதையும் பெறாமல் தமிழக அரசு கடந்த 2019 நவம்பர் 12ஆம் தேதி பொதுப்பணித் துறை சார்பில் அரசாணை எண் 193 ஐ பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்டா பாசனத்திற்காக வழங்கப்படும் தண்ணீரில், உபரி நீரை குழாய் மூலமாக எடப்பாடிக்கு கொண்டு செல்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழக முதல்வர் இது தொடர்பாக சட்டமன்றத்தில் எவ்விதமான விவாதத்தையும் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார்.

image

முதல்வர் தனது சொந்த தொகுதிக்கு மட்டும் நன்மையை செய்யும் வகையில், 565 கோடி மதிப்பீட்டில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் இதற்கான பணிகளைத் தொடங்குவதில் முனைப்பு காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பொதுப்பணித் துறையின் சிறப்பு செயலர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது அதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 தாலுக்கா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணும் விதமாக, மேட்டூர் அணையில் இருந்து, உபரி நீராக 0.555 டிஎம்சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. இது தீர்ப்பாயத்தின் உத்தரவில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இது எவ்விதத்திலும் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது” எனக் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.