விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி மூலம் கலக்கிய ரக்‌ஷன், சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்து பாராட்டுகளையும் குவித்த  ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து தமிழக மக்களின் மனங்களை கொள்ளை அடித்துள்ளார். இரு நாட்களுக்குமுன் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பார்த்துவிட்டு ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். சந்தோஷப் பூரிப்பில் இருக்கும் ரக்‌ஷனிடம் பேசினோம்…

image

  ’சூப்பர் ஸ்டார்’ பாராட்டியிருக்கிறாரே?

 படத்தின் இயக்குநர் தேசிங் அண்ணன், தலைவரின் மிகப்பெரிய ஃபேன். அதனாலேயே, படம் ஆரம்பிக்கும்போது ஆசீர்வாதம் வாங்கிட்டுத்தான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணினார். ஆனால், அப்போது தலைவருக்கு அண்ணனை தெரியாது. புது இயக்குநர் வருகிறார் என்று ஒரு வாழ்த்தை சொன்னார். ஆனால், அதற்கான பலன், இப்போது கிடைத்துள்ளது பெரிய  உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மொத்த டீமும் செம்ம ஹேப்பி. அதில், நானும் ஒரு பார்ட்டாக இருந்தேன் என்பதில் ரொம்ப பெருமையா இருக்கு.

image

 பட வாய்ப்பு எப்படி வந்தது?

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது,  ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் செகெண்ட் ரோல் இருக்கு. நடிக்க வர்றீயா?’ என்றார் இயக்குநர் தேசிங் அண்ணன். அதுவும், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார் என்றவுடனேயே ஓகே சொல்லிட்டேன். ஏனென்றால், துல்கர் சல்மான் சாரின் சாய்ஸ் சூப்பராக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதோடு, இந்தக் கதையே ரொம்ப எக்ஸைட்டாக இருந்தது. ’என்னது இந்தப் பசங்க திருடுவாங்களா?’ அடுத்த பத்து நிமிஷத்துல போலீஸில் மாட்டப்போகிறோம் என்றபோது, ’அப்போ நீதாண்டா வந்து காப்பாத்துற’ என்றார். அடுத்து போலீஸ் புடிச்சிட்டாங்க என்று பதறும்போது ‘பொண்ணுங்களைத்தேடித்தான் போலீஸ் வருது’ என்றார். கேட்கக் கேட்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா போனது கதை. எனக்கு ஏற்பட்ட உணர்வு மக்களுக்கும் ஏற்பட்டதால்தான் படம் வெற்றியடைந்துள்ளது. ஏற்கனவே, சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்படி வந்ததுதான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

 image

கலக்கப்போவது யாரு? சீசனில் வந்த சிவகார்த்திகேயன், சந்தானம் எல்லோரும் ஹீரோவாகிவிட்டார்களே? இனி நீங்களும் ஹீரோதானா?

நிகழ்ச்சி- சினிமா என்று இரண்டையும் தொடர்ந்து செய்வேன். அதேபோல, நிறைய பேர் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். அவர்களின், எதிர்பார்ப்புகளை ஏமாற்றக்கூடாது என்று நினைக்கிறேன். அடுத்ததாக இரண்டு படங்களில் லீட் ரோல்தான் பண்ணப்போகிறேன். அது, வேறலெவல் படங்களாக இருக்கும். மேலும், தேசிங் அண்ணனின் அடுத்தப் படத்திற்கான பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. தலைவரிடமிருந்தே  ஃபோன் வந்துள்ளது. இன்னும் நிறையபேர் ஃபோன் செய்துள்ளார்கள். விரைவில் வெளியிடுவார். அவரிடம் நிறைய கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் இதேபோல், எக்ஸைட்டிங்கான டிவிஸ்ட்டான கதையாக இருக்கும்.

image

 உங்களுக்கு  ‘கற்றல் குறைபாடு’ உள்ளதாக நீங்களே கூறியிருக்கிறீர்கள். எப்படி அவ்வளவு வசனங்களையும் மனப்பாடம் செய்து நிகழ்ச்சியிலும் படத்திலும் பேசினீர்கள்: பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

 எனக்கு மனப்பாடம் பண்ணுவது பிரச்சனை இல்லை. கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்துகொண்டே போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுடன்  நடித்துள்ளேன். ஒரு நடிப்புக்கு 35 பக்கம் ஸ்கிரிப்ட் இருக்கும். ஒரு நாளைக்கு 12 சீன்கள் என்றால் 500 பக்கம் இருக்கும். அதனையெல்லாம் மனப்பாடம் செய்துதான் நடிப்பேன். பழகிவிட்டதால், பெரிய கஷ்டமில்லை. சிவகார்த்திகேயன் அண்ணாவே என்னிடம் இதுகுறித்து கேட்டு பாராட்டினார். மேலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பார்த்துவிட்டும் பாராட்டியதோடு, தேசிங் அண்ணாவுடன் படம் பண்ணலாம் என்ற ஐடியாவிலும் இருக்கிறார். தெலுங்கிலும் ஒரு சூப்பர் ஹீரோ பேசியுள்ளார்.

 image

இயக்குநர் தேசிங்கின் அடுத்தப் படத்தில் உங்களை பார்க்கலாம்? அப்படித்தானே?

அண்ணன்தான் முடிவு செய்யவேண்டும். அப்படி, அவரின் அடுத்தப் படத்தில் நானும் இருந்தால், அதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமில்லை. சிறு தவறு ஏற்பட்டால்கூட உதவி இயக்குநர்களிடம் சாரி கேட்பார். ரொம்ப பாஸிட்டிவானவர். அவரிடம் உள்ள பாஸ்ட்டிவை மொத்த டீமுக்கும் ஏற்படுத்திவிடுவார். ஒரு கெட்ட விஷயத்தில் கூட நல்லதையேப் பார்க்கும் குணம் கொண்டவர். படம் வெற்றிபெறுவதற்கு முன்பே, இதையெல்லாம் பார்த்து  ’நாம நல்ல டீமோடதான் இருக்கோம்’ என்று சந்தோஷப்பட்டேன்.  ‘கொரோனா எல்லோரையும் முடக்கிவிட்டதே’ என்றபோது,  ‘நாம் கொரோனா ஊரடங்கில் கற்றுக்கொள்வதற்கான காலமாக எடுத்துக்கொள்வோம். எதையாவது கற்றுக்கொள்வோம்’ என்று உற்சாகமூட்டி இரண்டு மூன்று விஷயங்களை செய்ய வைத்துவிட்டார். அவ்வளவு எனர்ஜிட்டிக்கானவர். அதோடு, சிறு காட்சிகளுக்குக்கூட ரொம்ப டீட்டெய்லாக ஆராய்ந்து முழுமையாக காட்சிப்படுத்துவார். நான் வியந்துப் பார்க்கும் அறிவாளி அவர்.

 image

படம் கொரோனா தொற்று பரவாமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய ஹிட் ஆகிருக்குமே? என்று வருத்தப்பட்டதுண்டா?

கொரோனாவிற்கு முன்பே படம் பெரிய வெற்றிதான். கொரோனா வராமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால்,  ‘கொரோனாவால் தடைப்பட்ட விஷயத்திற்கு வருத்தப்படகூடாது. நிறைய பேருக்கு எவ்வளவோ விஷயங்கள் தடைப்பட்டுள்ளது’   என்று சொல்லி அதிலும் பாஸிட்டிவிட்டியை உண்டாக்கியவர், தேசிங் அண்ணா. இப்போதும், படத்தை நெட் ஃபிளிக்ஸில் பார்த்துவிட்டு எல்லோரும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஷுட்டிங்கில் துல்கர் சல்மானுடன் நடிக்கும்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

துல்கர் சல்மான் சாரின் 25 -வது படம் இது. ஆனால், எனக்கு முதல் படம். மலையாளத்தில் பெரிய ஸ்டார் அவர். இந்தி படம் எல்லாம் பண்ணியிருக்கார். அதனால், ஒரு தயக்கமும் பயமும் இருந்தது. நான் தயக்கத்தில் இருப்பதை புரிந்துகொண்டு அவராக பேச ஆரம்பித்துவிட்டார்.  20 நாட்கள் ஷெட்யூல் முடிந்து கொஞ்சநாள் இடைவெளி விட்டு மீண்டும் ஷூட்டிங் போனபோது, நான் மீண்டும் கூச்சப்பட்டுக்கொண்டு பேசவில்லை. ‘இங்க வா.. வா.. என்ன மச்சான்.. ஏன் அமைதியா இருக்க.. இந்தா சாக்லேட் சாப்பிடு’ என்று கலாய்த்து ஜாலியாக பேசினார். அதன்பிறகுதான், எனக்கு தயக்கம் போனது. எவ்வளவு பிஸியான சூழலிலும் ‘சாப்ட்டியா’ உனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிடுறேன் என்பார். வெரி ஸ்வீட் பர்சன். தன்னுடன் நடிப்பவர்கள் கம்ஃபோர்ட்டபிளாக இருக்கிறார்களா? என்று யோசிப்பதே வேற லெவல்தான்.

image

 நீங்கள் நடித்தப் படத்தில் ஜாக்குலின் எப்படி வந்தார்?

பணத்தையெல்லாம் இழந்து என்ன செய்வதென்று யோசிக்கும்போது, ஒரு தோழி வந்து உதவி செய்தால் நல்லா இருக்கும் என்று தேசிங் அண்ணா யோசித்தார். யாரோ ஒரு தோழி வருவதற்கு ஜாக்குலினையே வரவைத்து விடலாம் என்று வைத்துவிட்டோம்.

படம் பார்த்துவிட்டு உங்கள் குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்?

எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். எனது, அம்மா எனக்கு எப்போதுமே ரொம்ப ரொம்ப சப்போர்ட். இப்போதுவரை, நான் என்ன செய்துள்ளேன் என்று கேட்கமாட்டார். பையன் ஏதாவது பண்ணுவான். அது, நல்லதாதான் இருக்கும்  என்ற நம்பிக்கை வைத்துள்ளவர். மேலும், சத்யராஜ் சார், இயக்குநர் ஹரி சார் ஃபோன் செய்து பாராட்டினார்கள். இந்தப் பாராட்டுகள் எல்லாம் இன்னும் நல்லப் படம் நடிக்கவேண்டும் என்று பொறுப்பைக் கூட்டியுள்ளது. என்னை மக்கள் ஏற்றுக்கொண்டதே பெரிய பாராட்டுத்தான்.

image

 இயக்குநர் கெளதம் மேனன் ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கியவர். அவருடன் நடித்த அனுபவம்?

கெளதம் மேனன் சார் மிகப்பெரிய இயக்குநர். அவரின் மிகப்பெரிய ஃபேன் நான். அவருடன் நடிக்கப்போகிறோம் என்றதும் பயமே வந்துவிட்டது. ஏனென்றால், சேனலில் இருக்கும்போது நடிகர்கள் அருகில் சென்று மைக் வைக்கச் சொல்லும்போது சிலர் கோபப்பட்டுள்ளார்கள். அதனால், எனக்கு பயம் இருந்தது. ஆனால், அதனையெல்லாம் கெளதம் மேனன் சார் நொறுக்கித் தள்ளிவிட்டார். ஷூட்டிங்கில் என்னை பார்த்ததும் ’ஹேய் ரக்ஷன் எப்படி இருக்க?’ என்று நலம் விசாரித்தார். அவ்வளவு எளிமையானவர். இந்த ஊரடங்கில்கூட ‘எப்படி இருக்க? பத்திரமா இரு’ என்று இரண்டு மூன்று தடவை நலம் விசாரித்தார். ஊரடாங்கால் மிகவும் போர் அடித்துவிட்டது. உடற்பயிற்சிகளும் கதை விவாதங்களும் போவதால் தப்பித்தேன். ஆனால், வாழ்க்கையே கொஞ்சம் வெறுத்திருக்கும்போது, கெளதம் மேனன் சாரின் விசாரிப்பு மிகப்பெரிய சந்தோஷம் கொடுத்தது. நான் பழகியவர்களில் அவர், ஒரு மிகச்சிறந்த நல்ல மனிதர்.

image

ஹீரோவாகிட்டீங்க. எந்த நடிகையுடன் நடிக்க விருப்பப்படுகிறீங்க?

நடிக்கணும்னு மட்டும்தான் ஆசைப்படுறேன். எனக்கு நடிகைகள் பேர் கூட தெரியாது. நல்ல கதைகளில் மட்டும் நடிக்கணும். அவ்ளோதான்.

பி.பி.ஓவில் வேலைக்கு சேரும்போது கொஞ்சம் கோக்குமாக்கு செய்து சேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளீர்களே? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திலும், அதேபோன்ற ரோல் வந்தபோது என்ன தோன்றியது?

லைஃப்ல எல்லோரும் சின்ன சின்ன தப்பை முன்னேற்றத்திற்காக செய்திருப்பார்கள். நாமும் ஒரு கேடிதான். (சிரித்தபடியே) நமக்கு ஏத்தாப்பல இது, ஒரு படம்தான்னு நினைச்சேன்.

– வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.