எம்.எஸ்.தோனி படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். கடந்த ஜூன் மாதம் அவரது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
மனஅழுத்தம் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என சொல்லப்பட்டது. பின்னர் பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிஸம் குறித்தும் பேசப்பட்டது. இந்நிலையில் சுஷாந்தின் தந்தை அண்மையில் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது போலீசில் புகார் தொடுத்தார். அதில் தற்கொலைக்கு தூண்டுதல், நிதியை கையாடுதல் மற்றும் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ரியா மீது வைத்திருந்தார். போலீசாரும் அது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ‘அவர் மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டோ அல்லது மருத்துவரிடம் சென்றோ நான் பார்த்ததே இல்லை’ என அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் சுஷாந்தின் சமையல்காரர் அசோக்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளது ‘சுஷாந்த் உடற்பயிற்சியில் அதிக நேரம் செலவிடுவார். அதற்காக எப்போதுமே அவர் பிட்னஸ் பயிற்சியாளரோடு தான் இருப்பார். அவர் மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டோ அல்லது மருத்துவரிடம் சென்றோ நான் பார்த்ததே இல்லை.
அவரும் நடிகை ரியாவும் கடந்த ஆண்டு ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அந்த பயணத்திற்கு பிறகு அவர் உடல் அளவில் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டியிருப்பார் என எண்ணினேன். ஆனால் இப்போது தான் எனக்கு புரிகிறது அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று. அதோடு சுஷாந்த் சம்மந்தப்பட்ட அனைத்தையும் ரியா தனது கட்டுப்பாட்டின் கீழ் அதன் பிறகு கொண்டு வந்தார். என்னை பணியிலிருந்து நீக்கியதும் ரியா தான்’ என தெரிவித்துள்ளார் அவர்.