கடந்த ஜூன் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். இவரது மறைவு குறித்து பல சர்ச்சைகளும், இரங்கல்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரது சகோதரி ஸ்வேதா, சுஷாந்துடன் தனது கடைசி மெசேஜ் ஸ்க்ரீன்ஷாட்டையும் சின்ன வயது புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் ஜூன் 10ஆம் தேதி கடைசியாக பேசியிருக்கிறார். அதில் அமெரிக்கா வந்த தன்னைப் பார்க்கும்படி கேட்டிருக்கிறார். சுஷாந்தும் வர முயற்சிக்கிறேன் என பதில் கொடுத்துள்ளார்.
அதோடு, ’’4 அல்லது 5 வயதிருக்கும்போது ஒருமுறை பள்ளியில் சுஷாந்த் எனது வகுப்பின் முன்பு வந்து நின்றது இன்றும் என் நினைவில் இருக்கிறது. அப்போது நான் ஆரம்பக்கல்வி வகுப்பில் இருந்தேன். தம்பி நர்ஸரி பள்ளியில் இருந்தான். இரண்டு பேரும் வேறு வேறு கட்டிடங்களில் இருந்தோம். திடீரென இடைவேளையின்போது என் வகுப்பறையின் முன்பு வந்து நின்றான். பின்பு என் வகுப்பு ஆசிரியரிடம் அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி என்னுடனே உட்காரவைத்துக் கொண்டேன். இரண்டு வகுப்புகளுக்குப் பிறகுதான் சுஷாந்தை அவன் பள்ளிக்கு அனுப்பிவிட்டார்கள்.
என்னைப் பார்க்கவருவதாக கூறிய அவன் இனி எப்போதும் வரமாட்டான் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை’’ என தனது இளம்வயது ஞாபகங்களையும் பகிர்ந்துள்ளார்.