கொரோனாவால் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையால் வாடி வந்த 3 பெண் குழந்தைகளின் தாய் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆவடி அடுத்த சேக்காடு டி.ஆர்.ஆர் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர், டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு, இளவரசி (5) நிகிதா (3), தபிதா (9மாதம்) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளன. 

image

இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி, தபிதாயுடன் வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும்  அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், இன்று காலை ஆவடி அடுத்த சேக்காடு ஏரியில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக ஆவடி போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து போலீசாரும் தீயணைப்புத் துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது, ஏரியில் இறந்து கிடந்தது புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது 9 மாத பெண் குழந்தையும் ஏரியில் பல மணி நேரம் தேடினர். ஆனால், குழந்தை தபிதாவின் உடல் கிடைக்கவில்லை.

image

அதன் பின்னர்  புவனேஷ்வரியின் சடலத்தை போலீசார்  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் கடந்த 4 மாத காலமாக ஊரடங்கால் பாலாஜிக்கு வேலை இல்லை என்பதும் இதனால், புவனேஸ்வரி குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்தது.  இதனால், மனம் உடைந்த புவனேஸ்வரி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

image

புவனேஸ்வரியின்  9 மாத குழந்தை பற்றி எந்த விவரமும் முழுமையாக தெரியவில்லை. இவர், குழந்தை தபிதாவை வேறு எங்காவது விட்டு சென்றாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.