தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் முகாமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கொரோனா சோதனை 33 ஆயிரம் நபர்களுக்கு நடத்தப்பட்டுள்ளன. இதில் 1403 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 687 பேர் மட்டும் தென்காசி மாவட்ட மருத்துவமனை, ஆய்க்குடி தனியார் கல்லூரி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை, மற்றும் வாசுதேவ நல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் குருவிகுளம் அருகிலுள்ள ஆவுடையாள்புரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவர் நோய் தொற்று கண்டறியப்பட்டு வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் நேற்று இரவு பத்தரை மணி வரை அலைபேசியில் குடும்பத்தாருடன் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நோய் தடுப்பு சிகிச்சை முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – +91 44 2464 0050, +91 44 2464 0060)