தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இம்மாதங்கள் பிரதான சீசன் காலமாகும். தென்மேற்குப் பருவமழை பொழியும் இக்காலத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். சுற்றுலாப் பயணிகள் ஆராவாரத்துடன் குளித்து மகிழ்வார்கள்.
அடுத்ததாக சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 8 முதல் 10 நாட்கள் வரை விமர்சையாக நடைபெறும் இத்திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகள், மலர் கண்காட்சி, விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் என விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கும்.
இச்சூழலில் நிகழாண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் சுற்றுலாத் தலங்களுக்கு தளர்வு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வழக்கமாக ஜூலை இறுதி வாரத்தில் தொடங்கும் சாரல் திருவிழா நடப்பாண்டில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லையென்பது உறுதியாகியுள்ளது. சமூக இடைவெளி, பொதுமக்கள் கூடுவதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சாரல் திருவிழா ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் அப்போதும் சாரல் திருவிழா நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சாரல் திருவிழா நடைபெறாதது சுற்றுலாப்பயணிகளிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.