திரையரங்குகளை திறக்க தற்சமயம் சாத்தியக் கூறுகள் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “கோவில்பட்டி அருகே விரைவில் இராணுவ விமானபடை தளம் அமைய வாய்ப்பு உள்ளது. கோவில்பட்டி அருகே கயத்தார் விமானநிலையம் தரமான விமான நிலையம். அதன் ஓடுதளம் இன்றும் தரமாக உள்ளது. 2ஆம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய இராணுவத்தில் உள்ள விமான படைக்கு ஒப்படைப்பதற்காக கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத்தெரிவித்தார்.
மேலும் திரையரங்குகள் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளை திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை. வெளிநாடுகளில் உள்ள திரையரங்குளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அதை இங்கு நடைமுறைப்படுத்தினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது. நஷ்டத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை வரும். திரைப்படத் துறையினருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. நாட்டில் உள்ள நிலைமையை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார்” என்றார்.