2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த வாய்ப்பிருக்கிறதா இல்லையா என்ற தெளிவான முடிவை பிசிசிஐ இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் பிசிசிஐ அது குறித்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தியாவில் மார்ச் மாதம் நடைபெற இருந்த 13 ஆவது ஐபிஎல் டி20 தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனிடையே இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருந்தது. ஆனால், இப்போது உலகக் கோப்பை போட்டியும் அடுத்தாண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பிசிசிஐயின் பட்டியலில் இப்போது மூன்று நாடுகள் ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறது. அதில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்து. இதில் எந்த நாட்டை பிசிசிஐ தேர்வு செய்யும் என்பது மில்லியன் டாலர் கேள்வி இருக்கிறது. ஆனால் பிசிசிஐ அப்படி ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு எடுத்தால் அது நிச்சயம் ஐக்கிய அரபு அமீரகமாகத்தான் இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இனி வரும் காலம் மழைக்காலம் என்பதால் நிச்சயம் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ அங்கு நடத்தாது.
நியூசிலாந்துக்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பே இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். நியூசிலாந்து நாட்டுக்கும் நமக்கும் நேர வித்தியாசம் மிகவும் அதிகம். பொதுவாக நம் நாட்டில் இரண்டு நேரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 8 மணிக்கும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படும். எனவே ஐபிஎல் போட்டிகள் இந்திய நேரத்துக்கு ஏற்றப்படி நியூசிலாந்தில் நடத்த முடியும். அவ்வாறு நடத்தினால் அது இந்திய நேரப்படி காலையில்தான் நேரலையில் பார்க்க முடியும் என்கின்றனர்.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்தினால் இந்தப் பிரச்னை இல்லை. இந்திய நேரப்படி 1 மணி நேரம் 30 நிமிஷம்தான் வித்தியாசம். அதனால் மாலை போட்டியோ, இரவுப் போட்டியோ ஆகியவற்றை எளிதாக நடத்த முடியும். நேரடி ஒளிப்பரப்பிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது. மேலும் உலகத் தரமான கிரிக்கெட் மைதானங்களும் அமீரகத்தில் இருக்கிறது என்பதால் பிசிசிஐயின் முதல் சாய்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்துக்குதான் என அடித்துச் சொல்லப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கிரிக்கெட் வாரியம் தலைவர் முபாஷீர் உஸ்மானி “கல்ஃப் நியூஸ்”க்கு அளித்த பேட்டியில் கூட “நாங்கள் ஏற்கெனவே பலமுறை சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்தி காட்டியிருக்கிறோம். ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொதுவான இடமாக இருக்கிறது. எனவே நாங்கள் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம்” என கூறியுள்ளார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் “ஏற்கெனவே 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐ நடத்தியது. அப்போது இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் முதல் சுற்றுப் போட்டிகளை அமீரகத்திலும், மீதமுள்ள போட்டிகள் இந்தியாவிலும் நடைபெற்றது. இலங்கையிலும், நியூசிலாந்திலும் ஐபிஎல் போட்டிகளை நடத்த எப்போதும் வாய்ப்பு இல்லை. எனக்கு தெரிந்த வரையில் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் அமீரகத்தில் மட்டுமே நடக்கும்” என திட்டவட்டமாக கூறினார்.