மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்தால் போதும் பயிற்சிக்கு பின்பு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் குவிக்க தயார் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி 2008 ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்டார். அதன் பின்பு 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் விலகிக்கொண்டார். இப்போது பிசிசி தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் கங்குலி வங்கமொழி பத்திரிக்கைக்கு சுவாரஸ்யமான பேட்டி அளித்துள்ளார்.
அதில் “நான் விளையாடிய நேரத்தில் எனக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருந்தால் இன்னும் ரன்களை குவித்திருப்பேன். நாக்பூர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெறவில்லை என்றால் அடுத்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் ஜொலித்திருப்பேன். இப்போதும் கூட எனக்கு 6 மாதங்கள் கூட வேண்டாம் 3 மாதங்கள் பயிற்சிக்கான நேரம் கொடுங்கள், 3 ரஞ்சிப் போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளியுங்கள் நான் நிச்சயம் ரன்களை குவிப்பேன்” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் “நீங்கள் எனக்கு வாய்ப்புகளை கொடுக்காமல் என்னுடைய நம்பிக்கையை எப்படி உங்களால் உடைக்க முடியும். 2007 – 2008 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்தும் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். பின்பு வாய்ப்புகள் வரவில்லை. வாய்ப்புகள் வராமல் என்னை நான் எப்படி நிரூபிப்பது ? என் திறமையை யாருக்கு காட்டுவது ?” என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கங்குலி.