கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொதுமக்கள் உதவியுடன் கல்லூரி மாணவர் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, காவேரி நகரைச் சேர்ந்தவர் பேரரசன் (18). கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில்
பிசியோதெரபி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் கல்லுாரிகள் மூடப்பட்டதையடுத்து சென்னையில் இருக்கிறார். தனது உறவினர் விக்னேஷுடன் நண்பரை பார்ப்பதற்காக பேரரசன் வெளியில் சென்றார்.
சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அங்கு குடிபோதையில் நின்றுக் கொண்டிருந்த கும்பல் பேரரசனை வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பேரரசனிடம் இருந்து ரூ. 2 ஆயிரம் பணத்தை பறித்து விட்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.
இது தொடர்பாக பேரரசன் தனது உறவினர்களிடம் சென்று கூறினார். இனையடுத்து நண்பர்கள், உறவினர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அதே கும்பல் அங்கு நின்று கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பேரரசனின் உறவினர்கள் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து அடித்து உதைத்தனர்.
அந்த கும்பலில் இருந்த ஒரு நபர் தப்பியோடி விட்டார். பிடிபட்ட மற்ற இருவரையும் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை சைதாப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்த அர்ஜுன், அருண் என தெரியவந்தது. தப்பியோடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.