திருப்போரூர் அருகே நில ஆக்கிரமிப்பு பிரச்னையில் திமுக எம்.எல்.ஏவின் தந்தை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ளதுரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாண்டவமூர்த்தி. இவரது சகோதர் குமார். இவர்களின் நிலத்திற்கு வழி அமைக்க இன்று சுமார் 50 பேருடன் ஜேசிபி மற்றும் டிராக்டர் கொண்டு ஊருக்கு சொந்தமான கோயில் நிலத்தில் சாலை அமைக்க முயற்சித்துள்ளனர். அப்போது, ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதய வர்மணின் தந்தை லட்சுமிபதி ஆகியோர் அவர் தடுத்து நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கைகலப்பானது. தாண்டவமூர்த்தியின் ஆதரவாளர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட லட்சுமிபதி அருகில் உள்ள தனது வீட்டில் இருந்து அனுமதி பெற்ற நாட்டு துப்பாக்கி கொண்டு எதிர் தரப்பினரின் காரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இதில் காரின் கண்ணாடியில் குண்டு துளைத்தது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவரின் முதுகு பகுதியில் துப்பாக்கி தோட்டா பட்டதில் அவரும் காயமுற்றார்.
காயம் அடைந்தவர்கள் கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ஜேசிபி மற்றும் டிராக்டர், வீச்சருவாள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் மற்றும் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உட்பட 100 க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.