மதுரையில் 50 வருடங்களுக்கு மேலாக ஒரு ரூபாயில் தொடங்கி கடைசியாக 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா உடல்நலக்குறைவால் காலமானார்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை ஒன்றில் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி மதுரை மக்களின் நீங்காத அன்பையும், புகழையும் பெற்றவர் தான் 87 வயதான ராமு தாத்தா. 1957 ம் ஆண்டு வள்ளலாரின் சத்திய ஞான சபை வடலூருக்கு சென்றதன் விளைவால் வள்ளலாரை போல தானும் பொதுமக்களுக்கு உணவளித்து சேவை செய்ய வேண்டும் என்கிற ஆசையை வளர்த்துக்கொண்டார்.
அதையடுத்து 1967 ஆண்டு வெறும் ஒன்னே கால் ரூபாய்க்கு காய்கறி கூட்டுகளுடன் சாப்பாடு வழங்க தொடங்கினர். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பூக்கடைகள் அமைந்துள்ள பகுதியில் எதிரே சிறிய பெட்டிக்கடை ஒன்றில் தனது சிறிய அளவிலான உணவகத்தை நடத்தி வந்தார். நாளடைவில் விலை வாசி உயர்வடைய 2 ரூபாய், 5 ரூபாய் எனச்சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா கடைசியாக 10 ரூபாய்க்கு தனது உணவகம் மூலம் சாப்பாடு வழங்கினார்.
அண்ணா பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், ராஜாஜி மருத்துவமனையும் அமைந்திருந்ததால் மனு கொடுக்க வருபவர்கள், சிகிச்சை பெற வருபவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த ரூபாயில் வயிறு நிறைய உணவருந்தியுள்ளனர். கையில் பணம் இல்லாமல் வருபவர்களுக்கு கூட சாப்பிட வைத்து நாளை காசை கொடுங்கள் என கூறுபவர் ராமுதாத்தா. வெறும் சாப்பாடு என்பது மட்டும் இல்லாமல் மூன்று வகை காய்கறி கூட்டுக்களோடு 10 ரூபாய்க்கு உணவு கொடுத்து வந்தவர். 4 ஆண் பிள்ளைகள் 3 பெண் பிள்ளைகள் இருந்த போதிலும், தனது சேவைப்பணியை விட்டு விடாமல் தொடர்ந்து செய்தார்.
இவருடைய சேவைக்கு அவருடைய மனைவி பூரணத்தம்மாளும் மிக முக்கிய காரணம். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட 89 வயதை கடந்த ராமு தாத்தா கடந்து பத்து நாட்களுக்கும் மேலாக கடுமையான உடல்நலக்குறைவோடு காணப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “வாழ்ந்த வரை எல்லோருக்கும் சாப்பாடு கொடுத்தார் கடைசியில் அவரை பார்க்க ஆள் இல்லாமால் போய்விட்டனர். எனக்கு தெரிந்து 35 வருடமாக சாப்பாடு கொடுத்தார். அவர் இல்லாமல் அண்ணா பேருந்து நிலையத்துக்கே அடையாளம் இல்லாமல் ஆகிவிட்டது. குப்பையில் கிடந்தவர்கள் கூட அவரது கடையில் சாப்பிட்டு சென்றனர்.
எனக்கு விவரம் தெரிந்து 4 இட்லி ஒரு ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளேன். முழு சாப்பாட்டை ஒன்றரை ரூபாய்க்கு வழங்கினார். தான் செய்த தொழிலை மனிதநேயமாக செய்தவர். சரித்திரமாக வாழ்ந்தவர். எல்லா மக்களும் பசியாற கடை நடத்தியவர். நேர்மையாக அன்போடு கடை நடத்தியவர். ராமு தாத்தாவின் கடையில் கலெக்டர் ஆபிசில் வேலை பார்த்த தாசில்தார் கூட 5 ரூபாய்கு சாப்பிட்டுள்ளார். மதுரை மக்களின் செல்லப்பிள்ளையாக உலகம் முழுவதும் புகழோடு வாழ்ந்தவர். காசே இல்லையென்றாலும் சாப்பிட்டு போக சொல்லுபவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகள் மற்றும் மகன் கூறுகையில், “வள்ளலார் நினைவாக வள்ளலாரை போலவே பசித்த உயிருக்கு உணவளிக்க வேண்டும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1 ரூபாய் தொடங்கி விலைவாசி உயர்ந்த போதும் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கியவர். அவரை போல யாரும் தொண்டாற்ற முடியாது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வருபவர்கள் முதல் பேருந்து ஏறி வெளியூர் போகிறவர்கள் வரை பலருக்கும் உணவு கொடுத்தார். அப்பாவின் தொண்டை நாங்கள் தொடர்ந்து செய்ய உள்ளோம். அவருடைய ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கும்.
55 வருடமாக கடை நடத்தினாலும் அதை சேவையாக நினைத்து செய்தார். யாருமே நம்மை குறை சொல்லக்கூடாது எனக்கூறி குறைந்த விலையில் முழு சாப்பாடு வழங்கினார். நாங்கள் கூட அவரை பலமுறை திட்டியுள்ளோம். இருந்தாலும் தொடர்ந்து பொதுத்தொண்டாகவே இதை செய்தார்” எனக் கூறினார்.