மத்திய பிரதேசத்தில் தான் காதலித்த பெண்ணையும், பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண்ணையும் ஒரே மேடையில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் பெத்துல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள கோடடோங்ரி தொகுதியின் கெரியா கிரமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். இவர் போபாலில் படிக்கும் போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வைந்துள்ளனர். இந்த நிலையில் சந்தீப்புக்கு வீட்டில் பெண் பார்த்து மணமுடிக்க முடிவு செய்து உள்ளனர்.
இதற்கு சந்தீப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர் பிடிவாதமாக இருந்துள்ளனர். இதனால் சந்தீப் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு சென்றது. சந்தீப் குடும்பம், சந்தீப் காதலியின் குடும்பம், சந்தீப் பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்துடன் பஞ்சாயத்தார் சமரசம் பேசினர். இதைத் தொடர்ந்து இரண்டு இளம் பெண்களும் சந்தீப்புடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர்.
அதன் பின்னர் அவரது திருமணம் கெரியா கிராமத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் மற்றும் இரண்டு மணப்பெண்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சந்தீப்பை மணந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளம் பெண் கோலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இந்த திருமணம் குறித்து மூன்று குடும்பங்களுக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு திருமணம் செய்யப்பட்டது என கோடடோங்ரி கிராம பஞ்சாயத்து துணைத் தலைவரும் திருமணத்திற்கு சாட்சியுமான மிஸ்ரிலால் பர்ஹத் கூறியுள்ளார்.