இந்தியாவில் தடை
இந்தியாவில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக் கொண்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவை போன்று ஆஸ்திரேலியாவும் சீனா செயலிகளும் தடை விதிக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும் அது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கெனவே கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கொரோனா நோய் பரவல் தொடர்பான பல தகவல்களை அந்நாட்டு மறைத்துவிட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததோடு, கொரோனாவை, சீன வைரஸ் என்று குறிப்பிட்டார்.
Also Read: டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை – அடுத்து என்ன நடக்கும்?
இந்திய சீன எல்லை பிரச்னை:
இந்த நிலையில்தான் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன படைகளுக்கு இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இருநாட்டு ராணுவம் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விவகாரம் உச்சத்தில் இருந்த நிலையில்தான் இந்தியா, சீன பின்னணி கொண்ட செயலிகளைத் தடை செய்தது. சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், டிக் டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ்’ நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் எனத் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா?
சீன செயலிகள் பயன்பாட்டில் இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா சீன செயலிகளைத் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக பயன்பாடுகளைத் தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார். பாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியின் போது அவர் இதைத் தெரிவித்தார்.
Also Read: `வுகானில் இருந்து ஏன் மற்ற பகுதிகளுக்குப் பரவவில்லை?’ – சீனா மீது சந்தேகம் எழுப்பிய ட்ரம்ப்
“சீன செயலிகளுக்கான தடை குறித்து நாங்கள் மிகவும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம். மக்களின் செல்போன்களின் இன்னும் சீன செயலிகள் இருக்கிறது. மிகச் சரியான விஷயத்தை அமெரிக்கா செய்யும்” என்றார். மேலும், அதிபரின் முறையான அறிவிப்புக்கு முன்பாகவே தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.
அதே நேரத்தில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளைப் பயன்படுத்தும் மக்கள் கவனமாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். உலக அளவில் சீன செயலிகளை இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதால் தகவல் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க தீவிரமாக ஆலோசனைகள் நடத்தி வருகிறது.