தகுதி நீக்க வழக்கு: நாளை விசாரணை!
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதன் பின்னர் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், `உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இதுகுறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
கொலை வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ!
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் தாக்கியதாலேயே அவர்கள் மரணமடைந்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Also Read: சாத்தான்குளம்: ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பு! -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிக்கிய பின்னணி
இதை ஏற்ற நீதிமன்றம், அதுவரை சிபிசிஐடி போலீஸார் வசம் விசாரணையை ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாத்தான்குளம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொள்வதாக தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: சாத்தான்குளம்: `ஒரு வருஷம் படிப்பு இருக்கு சார்!’ விசாரணையில் கலங்கிய தன்னார்வலர்கள்