நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர் முனையில் பேசிய அவர், சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சாலிகிராமம் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் வெறும் புரளி என தெரியவந்தது.
பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த எண் விழுப்புரத்தில் இருந்து பேசியிருப்பது தெரிய வந்தது.உடனடியாக இது தொடர்பாக விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம் போலீசார் அந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதனை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.