கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டியிருப்பதால், இங்கு யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். முக்கியமாக, மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் தண்ணீர் இருப்பதால் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள், தண்ணீருக்காகத் தேக்கம்பட்டி, வனபத்திரகாளியம்மன் கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடமாடிக்கொண்டிருக்கும்.
Also Read: காதில் ரத்தம்; உயிரிழந்த பெண் யானை! – மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி
இந்நிலையில், தேக்கம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் ஒரு பெண் யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
20 வயது மதிக்கத்தக்க அந்த யானையின் காதில் ரத்தம் இருந்ததால், அது துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், யானையின் தலையில் 2 செ.மீ அளவிலான ஈயக்குண்டு தாக்கியிருப்பது தெரியவந்தது. இடது காதில் இருந்த காயத்தை ஆராய்ந்தபோது, காது அருகில் இருந்து, மூளை வரை துளையிருந்ததும் கண்டறியப்பட்டது.
யானையின் மண்டை ஓடு பிளந்துபோனதும் தெரியவந்ததுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராமசாமி, கிருஷ்ணசாமி என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சட்ட விரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல, சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் ஓர் பெண் யானை இன்று காலை உயிரிழந்துள்ளது. அந்தப் பெண் யானை கடந்த ஒரு வாரமாக லிங்காபுரத்தில் தோட்டங்கள், ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தது. உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்ட அந்த யானை யாரையும் தாக்கவில்லை. வனத்துறை அந்த யானையை விரட்டுவதற்கான முயற்சியில் இருந்தனர் என்றும், மக்கள் கோரிக்கை வைத்தும் சிகிச்சை கொடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, யானை உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்று உயிரிழந்த 2 யானைகளுடன் சேர்த்து, கோவையில் கடந்த மூன்று மாதங்களில் 12 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகள் தொடர்ந்து உயிரிழப்பது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.“கோவையில் கடந்த சில மாதங்களாக யானைகள் தொடர்ந்து உயிரிழப்பதற்கு வனத்துறையின் அஜாக்கிரதையும் ஒரு காரணம். வனத்துறை சரியாகப் பணி செய்திருந்தால், யானைகளின் உயிரிழப்பை ஓரளவு தடுத்திருக்க முடியும்.
எனவே, யானைகளைச் சுட்டவர்களுடன் சேர்த்து, பணிகளை சரியாகச் செய்யாத வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
Also Read: நீலகிரி அதிர்ச்சி: மூங்கில் தேடிவந்த யானை! – தனியார் ரிசார்ட்டில் உயிரிழந்த சோகம்
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், “முதலில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது என்று நினைத்தோம். யானையின் காதில் இருந்த காயத்தை ஆராய்ந்தபோதுதான் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இன்று காலை தோட்டத்துக்கு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அதை விரட்டுவதற்காக சுட்டுள்ளனர்.
அது பெண் யானையின் மீது தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டது. இதுதொடர்பாக இரண்டு பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். விசாரணை முடிந்த பிறகு முழு விபரங்களையும் சொல்கிறோம்” என்றார்.