கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை தற்போதைக்கு தொடங்கும் எண்ணம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளனர்.
இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைத் துறையாக விளங்குவது கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரையுலகம். நாள் ஒன்றுக்கு குறைந்தது 70 படங்களுக்கான படப்பிடிப்புகளாவது நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 90 நாட்களாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மூன்று மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடைபெறாததால் சுமார் 500 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் திரைப்பட படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசிடம் திரையுலகினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதேசமயம் 10 முதல் 15 நாட்கள் வரை மட்டும் ஷூட்டிங் எஞ்சியுள்ள திரைப்படங்களின் பட்டியலை அரசு கேட்டிருந்தது.
அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகள் போல தமிழக அரசும் அனுமதி கொடுக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கையில் இருந்தனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்களைப் போல திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்குகளை திறக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர். அரசு அனுமதி வழங்கினால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
படப்பிடிப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் தற்போதைய முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் மரண விவகாரம்: சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு