பாலிவுட் நடிகர் சுஷாந்த் தூக்கிட்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்தார் என்று முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுஷாந்த் சிங் இறந்தபோது அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 8 ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் தனது குடியிருப்பின் 14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதால் இவை இரண்டிற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்குள்ளாக சுஷாந்த் சகோதரியின் கணவரான காவல்துறை ஏடிஜிபி ஓ.பி சிங் “அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, தீவிர விசாரணை வேண்டும்” என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சுஷாந்தின் பிரேத பரிசோதனையின் முதல் கட்ட அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுஷாந்தின் பிரேத பரிசோதனை, டாக்டர் ஆர்.என். கூப்பர் பொது மருத்துவமனையில் நடைபெற்றது. சுஷாந்த் தான் தற்கொலை செய்துக் கொண்ட காரணத்தை கடிதமாகவோ அல்லது வேறு வடிவிலோ தெரிவிக்கவில்லை என போலீஸார் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து காவல்துணை இணை ஆணையர் அபிஷேக் திரிமுகே கூறும்போது “முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவர்களால் பாந்த்ரா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் தூக்கிட்டு கொண்ட காரணத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே சுஷாந்த் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.