தோனி கேப்டனாகாமல் இருந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்கி இருந்தால் பிரமாதப்படுத்தியிருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் “கிரிக்கெட் கனெக்டட்” நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் ” இந்த கிரிக்கெட் உலகம் ஒன்றைத் தவறவிட்டுவிட்டது. அது தோனி இந்தியாவுக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்காதது. அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தால், மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கியிருந்தால், கிரிக்கெட் உலகம் வேறு ஒரு தோனியை ரசித்திருக்கும். ஒரு முற்றிலும் மாறுபட்ட தோனியை நாம் கண்டு இருக்கலாம்” என்றார்.
மேலும் தொடர்ந்த காம்பீர் “அப்படி அவர் களமிறங்கியிருந்தால் இன்னும் ஏராளமான ரன்களை குவித்திருப்பார், பல சாதனைகளை உடைத்திருப்பார். சாதனைகளை விடுங்கள் சாதனைகள் படைக்கப்படுவதே உடைப்பதற்காக தானே. அதைவிட ஒரு மிக நல்ல பேட்ஸ்மேனை கிரிக்கெட் உலகம் ரசித்திருக்கும். அது அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தாலும் சாத்தியப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இறுதியாகப் பேசிய காம்பீர் “ஒரு சமமான பிட்சில் மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கியிருந்தால், இப்போதுள்ள பவுலர்களை மனதில் வைத்துப் பார்த்தால் வேறு மாதிரியான சாதனைகளைப் படைத்திருப்பார். உதாரணத்துக்கு இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை நினைத்துப் பாருங்கள். இப்போது எதிலுமே தரமில்லை, அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதி வாய்ந்ததாக இல்லை” எனக் கூறியுள்ளார்.