வேலூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணிப் பெண் பிரசவத்தின் போது உயிரிழந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இளம் வயதினரும் கொரோனாவிற்கு உயிரிழப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண்ணின் மரணம் வருத்தத்துடன் கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 18 பேர் கொரோனா வைரசால் இறந்துள்ளனர். இதில் கொரோனா தவிர மற்ற நோய்ப் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் 3 என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்று வேலூரில் 20 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி அவர் ரத்த உயரழுத்தம் காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 4ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 6ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் 6ஆம் தேதி காலை 6.35 மணிக்கே உயிரிழந்துவிட்டார். அவருக்கு இன்று அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை எடுக்க முயன்றபோது அவர் இறந்தார்.
இதுதவிர சென்னையில் கடந்த 5ஆம் தேதி இரவு 8.46 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 49 வயது நபர், 6ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு உயிரிழந்தார். முன்னதாக அவருக்குக் கடந்த 30ஆம் தேதி கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, 1ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று 6ஆம் தேதி காலை 9.38 மணிக்குச் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 61 வயது மூதாட்டி அன்று மாலை 4.30 மணிக்கு உயிரிழந்தார். முன்னதாக அவருக்கு 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் சென்னையில் 5ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அன்றே கொரோனா உறுதி செய்யப்பட்ட 71 வயது முதியவர், 6ஆம் தேதி மதியம் 1.10 மணிக்கு இறந்தார்.