மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மின்சாரம், மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டு சென்றுவிடும். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்துசெய்யப்படும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது. இச்சட்டத் திருத்திற்கு, அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்தான், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வாலாபுரம் கிராமத்தில் விவசாய போர்வெல் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாலர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், ‘’விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், இலவசமல்ல. நாங்கள் உற்பத்திசெய்யும் விளைபொருள்களுக்கு மத்திய மாநில அரசால் லாபகரமான விலையை கொடுக்க முடியவில்லை. இதற்கு ஈடாகத்தான், தமிழக அரசு 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளின் போர்வெல்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால், இதை இலவச மின்சாரம் என்று சொல்லி எங்களை கொச்சைப்படுத்துகிறார்கள்.
Also Read: மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
இந்த மானிய விலை மின்சாரம்கூட, எங்களுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள், துப்பாக்கிச் சூட்டில் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அரசின் கடுமையான அடக்குமுறைகளுக்கு இடையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், போராடி இதனைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதை பறிக்கத் துடிக்கிறது மத்திய அரசு. இதற்காகத்தான், மின்சார திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன் அடையும். மின்சார திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் மட்டுமல்ல, 2.25 லட்சம் நெசவாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மின்சார மானியமும் ரத்துசெய்யப்படும். ஏழை எளிய மக்களும் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணம் பல மடங்கு உயரும். இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், கடுமையான போராட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகிறோம்” என்றார்.