மதுரை சமயநல்லூரில் புதுமணத் தம்பதிகள் , தங்கள் திருமண செலவை அன்னவாசல் திட்டத்திற்கு வழங்கியதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பிரியாணி உண்டு மகிழ்ந்தனர்.
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு உணவளிக்கும் விதமாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே – 1 ஆம் தேதி “மாமதுரை அன்னவாசல்” என்ற திட்டத்தை துவக்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு தேவையான உணவு தன்னார்வலர்கள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 நாள்களாக “மாமதுரை அன்னவாசல்” திட்டத்தில் தன்னார்வலராகப் பணிபுரிந்த வீரக்குமார் என்பவரின் திருமணம் இன்று சமயநல்லூரில் எளிமையாக நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் வீரக்குமார் – ராதிகா தம்பதியினர் புதுவாழ்வின் முதல் செயலாக தங்கள் திருமணச் செலவை அன்னவாசல் திட்டத்திற்கு வழங்கி, சுமார் 420 ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.
புதுமணத் தம்பதியின் இந்தச் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.