இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம் விருத்தாலம், திட்டக்குடி பகுதியில் விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். அதனை அடுத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என மின்சார வாரியம் தெரிவித்தது.
மேலும், விவசாயப் பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்பதை அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுவதாகவும், இலவச விவசாய மின் இணைப்பு தரும்போது மீட்டர் பொருத்துவது 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, ”விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். தட்கல் திட்டத்தில் மட்டும் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில் அதையும் வேண்டாம் என முதல்வர் கூறியுள்ளார்” என தெரிவித்துள்ளார்