இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடங்கப்பட இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து மும்பையிலும் ஆன்லைன் மதுவிற்பனை ஸ்விக்கி, சொமோட்டோ மூலம் நடைபெற இருக்கிறது. இது குறித்த ஆணையை மும்மை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில் “மும்பையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் வீடுகளுக்கு மதுபானம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் எந்தக் காரணத்திற்காகவும் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில் ” மதுக்கடைகள் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் சேர்ந்து கூட மதுபானங்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யலாம். மாநில அரசு மற்றும் கலால் வரித்துறையினரின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதைச் சம்மந்தப்பட்ட வார்டு அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் மதுபானங்களை மதுக் குடிப்போர் வீடுகளுக்கே கொண்டு செல்லும் ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்யலாம் என அறிவுறுத்தியது. அதன் படி சத்தீஸ்கர், மேற்கு வங்கம் , பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முறையை அமல்படுத்தின. இந்நிலையில் தற்போது இந்த நடைமுறையை இந்தியாவின் பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தப் போவதாகத் தகவல் வெளியானது. இப்போது ஜார்கண்ட், ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து மும்பை மாநகரும் ஆன்லைன் மது விற்பனையைத் தொடங்கியிருக்கிறது.