தேனி மாவட்டம் பெரியகுளம், ஜெயமங்கலம், தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திப்பட்டி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. ஏப்ரல், மே மாதங்களில், தேனி மாவட்டத்தில் திருவிழாக்கள் நிறைந்திருப்பதால், அதற்கான பூக்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கொரோனா ஊரடங்கு தளர்வு ஏற்பட்டும், திருவிழாக்கள், திருமணங்கள் உட்பட விசேஷங்கள் ஏதும் நடக்காத காரணத்தால், கோழிக்கொண்டை பூவைப் பறிக்காமல் செடியில் வாட விடுகின்றனர் விவசாயிகள்.
Also Read: `பாக்கெட்டில் உள்ள தேதியைப் பாருங்கள்..!’ -தேனி மக்களை அச்சுறுத்தும் காலாவதி உணவுப் பொருள்கள்
இது தொடர்பாக ஜெயமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நம்மிடையே பேசும் போது, “மற்ற பூக்கள் போல கோழிக்கொண்டைப் பூ இல்லை. சீசனில்தான் நல்ல விலை கிடைக்கும். ஏப்ரல், மே மாதங்களில்தான் திருவிழாக்களும், திருமணங்களும் நிறைய நடக்கும். அதற்கு ஏற்றாற்போல நாங்களும் பூ சாகுபடி செய்வோம். கோடைக்காலக் கடுமையான வெயிலையும் மீறி, சீசனுக்காக ஒவ்வொரு செடியையும் பாதுகாப்பா வளர்த்து எடுத்து பூப் பறித்து விற்பனை செய்வோம். இந்த வருடம், கொரோனா ஊரடங்கு காரணமாக, வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆரம்பித்து, எந்தத் திருவிழாக்களும் நடைபெறவில்லை.
Also Read: `இளைஞர் தற்கொலையை அடுத்து நெஞ்சுவலி மரணம்’ – அதிர்ச்சி கொடுக்கும் தேனி தனிமைப்படுத்தல் முகாம்
இதனால், கோழிக்கொண்டைப்பூ விற்பனையும் இல்லை. அதனால்தான் பூக்களைப் பறிக்காமல் விட்டுவிட்டோம். ஏன், தண்ணீர் கூட பாய்ச்சுவதில்லை. பூக்கள் வாடிக் கருகும் போது மனசு அவ்வளவு வலியா இருக்கு. என்ன செய்றது, இப்பதான் எங்களுக்கு சீசன். இதை நம்பிதான் சாகுபடி செய்தோம். ஆனா… இப்படி நிலை ஏற்படும் என நினைக்கவே இல்லை…” என்றார் கண்ணீரோடு.