இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராகக் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பிசிசிஐ ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதன்படி, ஒருவர் பிசிசிஐ அல்லது மாநிலக் கிரிக்கெட் சங்கங்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்த நிர்வாகப் பதவியையும் வகிக்க முடியாது. அதன்படி, கங்குலி, அடுத்த ஆண்டு பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக நேரிடும். ஏற்கெனவே அவர் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார்.
அப்படி அவர் பதவி விலகிய பின்னர், 2024-ம் ஆண்டு வரை பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் சங்கங்களில் எந்த நிர்வாகப் பொறுப்பையும் ஏற்க முடியாது. இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகக் கங்குலி பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்தக் கருத்துக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநர் கிரேம் ஸ்மித்தும் இப்போது ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போன்ற ஒருவர் வருவது முக்கியமான ஒன்று. கோவிட் 19 பிரச்னைக்குப் பிறகு ஐசிசிக்கு வலிமையான தலைமை தேவை. நவீன கால கிரிக்கெட்டைப் புரிந்துகொண்டு அதோடு நெருக்கமாகப் பயணித்தவரும் தலைமைப் பண்பு கொண்டவருமான ஒருவர் அதன் தலைமைப் பொறுப்புக்கு வருவது அவசியம்.
கிரிக்கெட் வீரரான கங்குலி போன்ற ஒருவர் ஐசிசியின் தலைமைப் பொறுப்புக்கு வருவது சிறப்பானது. கிரிக்கெட்டுக்கு அது நன்மை பயக்கும். கிரிக்கெட்டில் மதிப்புமிக்க அவரால், அதைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு இயங்க இயலும்’’ என்று ஸ்மித் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஐசிசியின் தலைவராக இந்தியாவின் சஷாங் மனோகர் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைய இருக்கும்நிலையில், அந்தப் பொறுப்புக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார். இவரும் ஏற்கெனவே பிசிசிஐ தலைவர் பொறுப்பை வகித்தவர்தான். அதேபோல், ஐசிசி தலைவராகக் கங்குலி வர வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவின் கோவரும் கருத்து தெரிவித்திருந்தார்.