கல்வியாளர், சமூக சிந்தனையாளர், மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், மருத்துவர் என பன்முகம் கொண்டவர் அயோத்திதாச பண்டிதர் என்பதை நாம் அறிவோம். அவர் மறைந்து நூற்றாண்டு கடந்த பின்பும் அவரைப் பற்றி முழுமையான தகவல்கள் மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை. அப்படியான சில தகவல்களைக் கொண்டுள்ளது இந்தக் கட்டுரை.

அயோத்திதாசர் 1845-ம் ஆண்டு மே 20-ம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தனக்கு தமிழ் கற்பித்த வல்லகாலத்தி அயோத்திதாசர் எனும் தன் ஆசிரியர் பெயரையே தன் பெயராக மாற்றிக்கொண்டார். இவரின் தந்தை சித்த மருத்துவராகவும் ஹாரிங்டன் துரையிடம் சமையல்காரராகவும் இருந்தார். அயோத்திதாசர் இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமி என்பவரை மணந்தார். ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தைக் கண்டு வெகுண்டெழுந்து சமூகச் சீர்திருத்தப் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கினார். சாதி ஒழிப்பையும் சமூக விடுதலையையும் தனது லட்சியமாக கொண்டிருந்தார்.

அயோத்திதாச பண்டிதர்

“கல்வி வாய்ப்பில்லாத தேசங்களை வரலாற்றில் கண்டிருப்போம். ஆனால், வாய்ப்பிருந்தும் கற்பதைத் தடுத்தது வர்ண தர்மத்தை ஏற்ற இந்தியத் துணைக் கண்டம்தான்” என்றுணர்ந்து ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்தார். “நமது மீட்சிக்கும் விடுதலைக்கும் வெளியிலிருந்து எவரும் உதவிட முடியாது. நமக்கான வலிமையை, சமகாலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் நாமே திரட்டி அணியாக எழுவதன் மூலம் நாமே சாதித்துக்கொள்ள முடியும்” என்று அறைகூவல் விடுத்தார். தமிழ், ஆங்கிலம், பாலி, சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளைக் கற்றிருந்தார். சாதி அழுக்கு தோய்ந்த பெயர்களை நீக்கி தமிழன் என்று உணர்தல் வேண்டும் என்றார். ஒரு பைசா தமிழன், திராவிட பாண்டியன் போன்ற இதழ்களையும் நடத்தினார். சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் எனவும் அழைத்தார். சிறந்த சித்த மருத்துவராகவும் விளங்கினார். தமிழ்த் தென்றல் திரு.வி.க-வின் குடும்ப மருத்துவராகவும் பண்டிதர் இருந்தார். இளமையில் திரு.வி.க-வுக்கு பக்கவாதம் ஏற்பட்டபோது அவரை எழுந்து நடமாடச் செய்தார் அயோத்திதாசர். இவர் பெயரில் சென்னை தாம்பரத்தில் சித்த மருத்துவ நிறுவனம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிட முன்னேற்றத்துக்காக அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, ஜான் ரத்தினம், மதுரை பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் இவருடன் இணைந்து பணியாற்றினார்கள். சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் “சமூகம் சாதியால் பிளவுற்றிருக்கும்போது இந்தியாவின் விடுதலை முதலில் அதன் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டும்” என்று முழங்கினார். இது அப்போது மேல்தட்டு மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது . ராஜாக்கள் ஆட்சி முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை அதிகாரவர்க்கத்தில் உயர் சாதியினர் ஆதிக்கம் இருந்ததை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தினார்.

1891-ம் ஆண்டு டிசம்பர் 1-ல் சென்னை மாகாண சங்க மாநாடு நீலகிரியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமைக்கான தனிப் பள்ளிகள், அரசுப் பணி, பொது குளத்தில் நீர் எடுக்கும் உரிமை, சமவுரிமை, கிராம அதிகாரிகளாக அவர்கள் அமர்த்தப்படுதல், கோயில் நுழைவு என்பன போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1892-ல் சென்னை மாகாண சங்கம் சார்பில் அரசுக்கு இரண்டு கோரிக்கை வைத்தார். ஒன்று கல்வியுரிமை மற்றொன்று நில ஒதுக்கீடு. இதனால் 1893-ல் தாழ்த்தப்பட்டவர்களிடம் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசாணையே வெளியிடப்பட்டது. இதுதான் பிறகு பஞ்சமி நிலம் உருவாகக் காரணமாக அமைந்தது.

ஒரு பைசா தமிழன்

தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை கட்டமைக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டார் அயோத்திதாச பண்டிதர். இதற்காக இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, திருக்குறள், நன்னூல், வீரசோழியம், நாலடியார், காக்கை பாடினியம் போன்ற தமிழ் இலக்கிய சான்றுகளை எடுத்துக் கையாண்டார். பவுத்த நெறியில் ஈடுபாடு கொண்ட அயோத்திதாசர் 1900-ம் ஆண்டு நண்பர் கிருஷ்ணசாமியாரைச் சேர்த்துக்கொண்டு மலிகண்ட விஹாரயில் பஞ்சசீலம் பெற்று பவுத்தரானார். 1902-ல் `தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம்’ எனும் அமைப்பை ராயப்பேட்டையில் நிறுவி பவுத்த மதக் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினார். இந்திய பவுத்த மதத்தின் முதல் மறுமலர்ச்சியாளர் என்றும் அழைக்கப்பட்டார். அயோத்திதாசர் மேற்கொண்ட முக்கியமாக ஆய்வுகளில் ஒன்று “இந்திர தேச சரித்திரம்”. இந்திர தேசத்தின் பிரதான கோட்பாடான `புத்த தர்மத்தை’ ஏற்று அரசர்களும் மக்களும் இன்புற்று வாழ்ந்ததாகவும், விவசாயம் செழித்திருந்ததாகவும், அறிவிலும் கலையிலும் மக்கள் தேர்ச்சி பெற்று விளங்கியதாகவும் கூறுகிறார்.

Also Read: தமிழ் வரலாற்றை புதியநோக்கில் எழுதியவர் அயோத்திதாசர்! – பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு!

தான் கட்டமைத்த இந்திர தேச வரலாற்றை முன்னெடுத்தும் மேலும் பல கருத்துகளை முன்வைத்தார். இந்திய வரலாறு என்பது பூர்வ பவுத்தத்துக்கும், ஆரியத்துக்கும் நடந்த போராட்டம் என்று தன் இந்திர தேச வரலாற்றின் மூலம் எடுத்துரைத்தார்.

“இந்த மீட்டுறுவாக்க வரலாறு என்பது வரலாறு அற்றவர்களின் வரலாறாக அமைகிறது” என்றார். அயோத்திதாசர் ஏன் பவுத்தத்தை முன் மொழிந்தார் எனக் கேள்வி எழுந்தபோது அவர் வழியை பின்பற்றிய பல அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் ஒரே பதிலைத்தான் அளித்தனர். அது காந்தியும், பாரதியும், திலகரும், விநோபாவும் ஏன் கீதையை முன்னெடுத்தனர் என வினா எழுப்பினால் அதற்கான பதில் கிடைக்கும் என்றனர். அயோத்திதாசரின் நோக்கமெல்லாம் சாதி பேதத்தை தவுடுபொடியாக்குவது மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்டோர் தங்கள் உயர்ந்த வரலாற்றை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்பதும்தான்.

அயோத்திதாசப் பண்டிதர்

உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க முனைப்பு காட்டுபவர்களைத்தான் பண்டிதர் என்று அழைப்பார்கள். அவ்வகையில் திருவள்ளுவர் பற்றிய புனைவுகளை ஆதாரத்துடன் வெளியிட்டு உண்மையை விளக்கினார் அயோத்திதாசப் பண்டிதர். விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரனின் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, திரிக்குறள் எனும் பெயரில் திருக்குறளுக்கு தெளிவுரை, புத்த மார்க்க வினா விடை, இந்திர தேச சரித்திரம், விவேக விளக்கம் போன்ற படைப்புகளையும் நிறுவியுள்ளார். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள், சாதிய மதவாத பிற்போக்கு சக்திகளை எதிர்க்கும் ஆளுமை என அனைத்துக்கும் முன்னோடியாக நிமிர்ந்து நிற்கிறார் அயோத்திதாசர். இந்திய நிலப்பரப்பில் அயோத்திதாசர் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக ஒலித்த அயோத்திதாசப் பண்டிதர் 1914-ம் ஆண்டு மே 5-ம் தேதி நிரந்தர ஓய்வுகொண்டார். அயோதிதாசர் உறங்கினாலும் அவரின் லட்சியக் கனவு இன்னும் விழிப்புடன்தான் உள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.