மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி-செல்வி தம்பதிக்கு மூர்த்தி, மாயக்கண்ணன் என்ற மகன்களும் ப்ரியா என்ற மகளும் உள்ளனர். மூர்த்தி மற்றும் ப்ரியாவுக்கு திருமணம் முடிந்த நிலையில், கடைசி மகன் மாயக்கண்ணன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.
ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்த மாயக்கண்ணனுக்கும் தாய் செல்விக்கும் சில ஆண்டுகளாக வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. இதை அப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி பார்த்துள்ளனர்.
அதுபோல் இன்று காலையில் மாயக்கண்ணனுக்கும் அவன் தாயாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கொஞ்சமும் இரக்கமில்லாமல் வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து கொடூரமாக வெட்டியதில் பலத்த காயமடைந்த தாய் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இத்தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா, காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயக்கண்ணனை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து இக்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.