கோவிட்- 19 நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆன்டிபயாடிக் மற்றும் ஐசோப்ரோபைல் ஆல்கஹால் (Isopropyl alcohol) ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட சானிடைஸர்கள்தான் அதிகத் திறன் கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைஸர்களைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்வது பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது.
பெங்களூரு நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிகப்படியான ஹேண்ட் சானிடைஸர் பயன்பாடு பார்வை சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு வித்திடுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
Also Read: `முதல்வர்கள் யோசனை: ஒட்டுமொத்த ஊரடங்குக்கு நோ?’ – புதிய திட்டத்தை வகுக்கும் பிரதமர் அலுவலகம்
அது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கண் எரிச்சல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்ட நபர்களை எங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம். ஆல்கஹாலை பிரதான மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேண்ட் சானிடைஸர்களைக் கைகளில் பூசிய பிறகு கைகளை மோந்து பார்ப்பது, கண்களைக் கசக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது, கண்ணில் உள்ள மென்யான சவ்வு போன்ற பகுதியில் காணப்படும் செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, கண்கள் வறட்சியடைகின்றன. இதனால் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.
ஹேண்ட் சானிடைஸர்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் சோப் மற்றும் ஹேண்ட் வாஷ் கொண்டு கைகளைச் சுத்தம் செய்வது மிகவும் பயனளிக்கும் என்கிறார் தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.
“சோப் அல்லது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹேண்ட் வாஷ் மூலம் கைகளைக் கழுவுவது மிகவும் நல்லது. சோப் பயன்படுத்தி கைகளைக் கழுவும்போது அழுக்குகள் நீங்கி, அதிகப்படியான கிருமிகளும் அழிக்கப்படுகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹேண்ட் சானிடைஸரை உலர்ந்த கைகளில் பயன்படுத்தினால் மட்டுமே முறையான சுத்தம் சாத்தியமாகும்.
மேலும், அதிக அழுக்கான மற்றும் தூசு நிறைந்த கைகளில் அதைப் பயன்படுத்தும் அதிலிருக்கும் கிருமிகள் முழுமையாக நீங்காது. எனவே, முடிந்தவரை சோப் கொண்டு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. வெளியில் செல்லும்போது தவிர்க்க முடியாத நேரங்களில் ஹேண்ட் சானிடைஸர்களைப் பயன்படுத்தலாம். சந்தைகள், விற்பனை வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் என எல்லா பொது இடங்களிலும் சோப் போட்டு கை கழுவ ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டால் மட்டும்தான் இந்த நோய் கிருமியிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றார்.