சுற்றுலா சென்று நாடு திரும்ப முடியாமல் மியான்மரில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கை உறவினர்கள் காணொளி காட்சி மூலம் செய்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் பொது போக்குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் பயணம் செய்ய முடியாதச் சூழல் நீடித்து வருகிறது. மக்கள் வீட்டுக்குள்ளாகவே முடக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சுற்றுலா சென்று நாடு திரும்ப முடியாமல் மியான்மரில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கை உறவினர்கள் காணொளி காட்சி மூலம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் வசந்த புரத்தைச் சேர்ந்தவர் தென்னரசு(59). இவர் வேலூர் மாநகராட்சியில் உதவிப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் இவரது மனைவி மணிமேகலையும் கடந்த மார்ச் 10-ம் தேதி மியான்மர் நாட்டிற்குச் சுற்றுலா சென்றனர். ஏப்ரல் 5-ம் தேதி ஊர் திரும்ப இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மியான்மரில் உள்ள ரங்கூன் நகரில் தங்கினர்.
இந்நிலையில் நேற்று தென்னரசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் உடலை இந்தியா எடுத்துச் செல்ல முடியாது என்றும் இங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ரங்கூனில் உள்ள தமிழ் சங்கத்தினரின் உதவியுடன் தென்னரசு உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. வேலூரில் உள்ள தென்னரசுவின் மகன்கள், உறவினர்கள் ஆகியோர் காணொளி காட்சி மூலம் இறுதிச் சடங்கைச் செய்தனர். மேலும் உடல் அடக்கத்தையும் காணொளி காட்சி மூலம் கண்டு உறவினர்கள் கண்ணீர் வடித்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.