தேனி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் பெண் குழந்தை பிறந்தது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கணவன் – மனைவி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த மனைவிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவம் நடை பெற்றது.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்ற நிலையில், அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. முன்னதாக இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்து இருந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன் தெரிவித்தார். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அந்த தம்பதியினர் உற்சாகத்தில் உள்ளனர்.