தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருவதும், அதில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் இறுதியில் ஒருநாளைக்கு 314 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 57 பேருக்கு தொற்று உறுதியாகியது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டோர் விகிதம் 18 புள்ளி 15 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் தொடக்கத்தில் பரிசோதனை எண்ணிக்கை 546ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75ஆகவும் இருந்தது.
இந்த சதவீதம் 13.73. அதற்கு அடுத்த 10நாட்களில் பரிசோதனை செய்யப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்காகியது. அப்போது பாதிப்பு விகிதம் 6.73. ஏப்ரல் 21ஆம் தேதி தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5ஆயிரத்தை கடந்தது. அப்போது பாதிப்பு விகிதம் 1.39. ஏப்ரல் 30ஆம் தேதி 9ஆயிரத்து 643 பேருக்கு பரிசோதனை நடத்த அதில் 76பேருக்கு தொற்று உறுதியாகியது. கடந்த 3 நாட்ளாக பரிசோதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மே 2ஆம் தேதி 10ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டோர் விகிதம் 2 புள்ளி 29 மட்டுமே. மே 3ஆம் தேதி பாதிக்கப்பட்டோர் விகிதம் 2.5 மட்டுமே. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்டவர்களை அதிகளவு கண்டறிய உதவுகிறது. மே 4ஆம் தேதி 12ஆயிரத்து 773 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 527 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.