திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதிகளில் சில நாள்களாக நாடோடியினத்தைச் சேர்ந்த சிலர் ரகசியமாக மான் கறியை விற்பனை செய்துவந்துள்ளனர். கிலோ 500 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டதால், மான்கறி ஆசையில் பொதுமக்கள் பலர் அந்த இறைச்சியை வாங்கிச் சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருப்பதால் விற்பனை சக்கைப் போடு போட்டுள்ளது.
நரிக்குறவர்களுக்கு தினமும் எங்கிருந்து மான்கறி கிடைக்கிறது. மானை எங்கு வேட்டையாடி இறைச்சியைக் கொண்டுவருகிறார்கள் என்றெல்லாம் யோசிக்காமலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி மான் இறைச்சியை வாங்கிச் சாப்பிடுவது குற்றம் என்பதைத் தெரிந்தும் கூட்டம் கூட்டமாக பலர் கறியை வாங்கி ருசித்துள்ளனர். இதுபற்றி வனத்துறையினருக்கு ரகசியமாகத் தகவல் கிடைத்தது.
Also Read: ‘‘இங்கு மான்கறி கிடைக்கும்…!’’ கசாப்புக் கடையா கானகம்..!
கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் நரிக்குறவ கும்பலைப் பிடிக்க ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினர். ஒருவர் சிக்கினார். அவரிடமிருந்த பையில் சோதனை செய்தபோது, இறைச்சியும் பூனைத் தலைகளும் இருந்தன. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் அந்த இளைஞரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இத்தனை நாள்களாக பூனைக்கறியை மான் கறி என்று ஏமாற்றி பொதுமக்களிடம் விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
விசாரணையில், அந்த நபர் சோலூர் அருகே உள்ள நமாஸ்மேடு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பதும் அவரைப் போல மேலும் சிலரும் பூனைக்கறியை மான்கறி என்று விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனைக் கைதுசெய்த வனத்துறையினர் மற்றவர்களையும் தேடி வருகிறார்கள். பிரியாணிக்குப் பெயர்பெற்ற ஆம்பூரில் மான்கறி ஆசையில் பூனைக்கறியை வாங்கி ருசித்த மக்களுக்கு, இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதே சமயம், வனவிலங்குகளின் இறைச்சியை வாங்கிச் சாப்பிடுபவர்கள் கண்டறியப்பட்டாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.