கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்களாக பாதிப்பு அதி தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், சென்னைக்கு அடுத்து அதிகம் பாதித்திருந்த கோவை கொரோனா வைரஸில் இருந்து வேகமாக மீண்டு கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
முக்கியமாக, கோவையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் இருந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் குணமடைந்த பகுதி என்ற பெருமையைப் பெற்றதுடன் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது கோவை.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 44 வயது நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையல் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, மேல் சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தடாகம் சாலை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் சென்றுவந்த அவர்கள், மீண்டும் கேரளா செல்வதற்காக அவர்களாக முன்வந்து கோவை அரசு மருத்துவமனையில் சோதனை செய்தனர். அதில், கணவன், மனைவி, 10 வயது ஆண் குழந்தை ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவாகியுள்ளது.
அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, கரும்புக் கடையைச் சேர்ந்த 31 வயது மதிப்புள்ள கர்ப்பிணி பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாத நிலையில், கர்ப்பமாக உள்ளதால் வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே, சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த 44 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், வெங்கிட்டாபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.